திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.37 திருவையாறு - திருத்தாண்டகம்
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும்
    அனலாடி ஆரமுதே யென்றேன் நானே
கூரார் மழுவாட் படையொன் றேந்திக்
    குறட்பூதப் பல்படையா யென்றேன் நானே
பேரா யிரமுடையா யென்றேன் நானே
    பிறைசூடும் பிஞ்ஞகனே யென்றேன் நானே
ஆரா வமுதேயென் ஐயா றனே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
1
தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந்
    தீர்த்தா புராணனே யென்றேன் நானே
மூவா மதிசூடி யென்றேன் நானே
    முதல்வாமுக் கண்ணனே யென்றேன் நானே
ஏவார் சிலையானே யென்றேன் நானே
    இடும்பைக் கடல்நின்று மேற வாங்கி
ஆவாவென் றருள்புரியும் ஐயா றனே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
2
அஞ்சுண்ண வண்ணனே யென்றேன் நானே
    அடியார்கட் காரமுதே யென்றேன் நானே
நஞ்சணி கண்டனே யென்றேன் நானே
    நாவலர்கள் நான்மறையே யென்றேன் நானே
நெஞ்சுணர் வுள்புக் கிருந்த போது
    நிறையு மமுதமே யென்றேன் நானே
அஞ்சாதே ஆள்வானே ஐயா றனே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
3
தொல்லைத் தொடுகடலே யென்றேன் நானே
    துலங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எல்லை நிறைந்தானே யென்றேன் நானே
    ஏழ்நரம்பி னின்னிசையா யென்றேன் நானே
அல்லற் கடல்புக் கழுந்து வேனை
    வாங்கி யருள்செய்தா யென்றேன் நானே
எல்லையாம் ஐயாறா வென்றேன் நானே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
4
இண்டைச் சடைமுடியா யென்றேன் நானே
    இருசுடர் வானத்தா யென்றேன் நானே
தொண்டர் தொழப்படுவா யென்றேன் நானே
    துருத்திநெய்த் தானத்தா யென்றேன் நானே
கண்டங் கறுத்தானே யென்றேன் நானே
    கனலாகுங் கண்ணானே யென்றேன் நானே
அண்டத்துக் கப்பாலாம் ஐயா றனே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
5
பற்றார் புரமெரித்தா யென்றேன் நானே
    பசுபதி பண்டரங்கா யென்றேன் நானே
கற்றார்கள் நாவினா யென்றேன் நானே
    கடுவிடையொன் றூர்தியா யென்றேன் நானே
பற்றானார் நெஞ்சுளா யென்றேன் நானே
    பார்த்தற் கருள்செய்தா யென்றேன் நானே
அற்றார்க் கருள்செய்யும் ஐயா றனே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
6
விண்ணோர் தலைவனே யென்றேன் நானே
    விளங்கும் இளம்பிறையா யென்றேன் நானே
எண்ணா ரெயிலெரித்தா யென்றேன் நானே
    ஏகம்பம் மேயானே யென்றேன் நானே
பண்ணார் மறைபாடி யென்றேன் நானே
    பசுபதீ பால்நீற்றா யென்றேன் நானே
அண்ணாஐ யாறனே யென்றேன் நானே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
7
அவனென்று நானுன்னை அஞ்சா தேனை
    அல்ல லறுப்பானே யென்றேன் நானே
சிவனென்று நானுன்னை யெல்லாஞ் சொல்லச்
    செல்வந் தருவானே யென்றேன் நானே
பவனாகி யென்னுள்ளத் துள்ளே நின்று
    பண்டை வினையறுப்பா யென்றேன் நானே
அவனென்றே யாதியே ஐயா றனே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
8
கச்சியே கம்பனே யென்றேன் நானே
    கயிலாயா காரோணா வென்றேன் நானே
நிச்சன் மணாளனே யென்றேன் நானே
    நினைப்பார் மனத்துளா யென்றேன் நானே
உச்சம்போ தேறேறீ யென்றேன் நானே
    உள்குவா ருள்ளத்தா யென்றேன் நானே
அச்சம் பிணிதீர்க்கும் ஐயா றனே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
9
வில்லாடி வேடனே யென்றேன் நானே
    வெண்ணீறு மெய்க்கணிந்தா யென்றேன் நானே
சொல்லாய சூழலா யென்றேன் நானே
    சுலாவாய தொன்னெறியே யென்றேன் நானே
எல்லாமா யென்னுயிரே யென்றேன் நானே
    இலங்கையர்கோன் தோளிறுத்தா யென்றேன் நானே
அல்லா வினைதீர்க்கும் ஐயா றனே
    என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
10
jpUr;rpw;wk;gyk;

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஆறாம் திருமுறை
6.38 திருவையாறு - திருத்தாண்டகம்
ஓசை ஒலியெலா மானாய் நீயே
    உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
    மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிது மினியாய் நீயே
    பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.
1
நோக்கரிய திருமேனி யுடையாய் நீயே
    நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
காப்பரிய ஐம்புலனுங் காத்தாய் நீயே
    காமனையுங் கண்ணழலாற் காய்ந்தாய் நீயே
ஆர்ப்பரிய மாநாக மார்த்தாய் நீயே
    அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தீர்ப்பரிய வல்வினைநோய் தீர்ப்பாய் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.
2
கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றர் நீயே
    கடல்வரைவான் ஆகாய மானாய் நீயே
தனத்தகத்துத் தலைகலனாக் கொண்டாய் நீயே
    சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே
    மலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திருநீல கண்டன் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.
3
வானுற்ற மாமலைக ளானாய் நீயே
    வடகயிலை மன்னி யிருந்தாய் நீயே
ஊனுற்ற ஒளிமழுவாட் படையாய் நீயே
    ஒளிமதியோ டரவுபுனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்து மமர்ந்தாய் நீயே
    அடியானென் றடியென்மேல் வைத்தாய் நீயே
தேனுற்ற சொல்மடவாள் பங்கன் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.
4
பெண்ணாண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே
    பெரியார்கட் கெல்லாம் பெரியாய் நீயே
உண்ணா வருநஞ்ச முண்டாய் நீயே
    ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணா யுலகெலாங் காத்தாய் நீயே
    கழற்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்ணார் மழுவாட் படையாய் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.
5
உற்றிருந்த உணர்வெலா மானாய் நீயே
    உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலைஞான மானாய் நீயே
    கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
    பிரானா யடியென்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திருநீல கண்டன் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.
6
எல்லா வுலகமு மானாய் நீயே
    ஏகம்ப மேவி யிருந்தாய் நீயே
நல்லாரை நன்மை யறிவாய் நீயே
    ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைக ளறுப்பாய் நீயே
    புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வந் தருவாய் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.
7
ஆவினில் ஐந்து மமர்ந்தாய் நீயே
    அளவில் பெருமை யுடையாய் நீயே
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே
    போர்க்கோலங் கொண்டெயி லெய்தாய் நீயே
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே
    நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே
தேவ ரறியாத தேவன் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.
8
எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே
    ஏகம்ப மேய இறைவன் நீயே
வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே
    வாரா வுலகருள வல்லாய் நீயே
தொண்டிசைத்துன் னடிபரவ நின்றாய் நீயே
    தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.
9
விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே
    விண்ணவர்க்கும் மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லும்நஞ் சுண்டாய் நீயே
    காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே
    தூமலர்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே
திண்டோள்விட் டெரியாட லுகந்தாய் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.
10
ஆரு மறியா இடத்தாய் நீயே
    ஆகாயந் தேரூர வல்லாய் நீயே
பேரும் பெரிய இலங்கை வேந்தன்
    பெரிய முடிபத் திறுத்தாய் நீயே
ஊரும் புரமூன்று மட்டாய் நீயே
    ஒண்டா மரையானும் மாலுங் கூடித்
தேரும் அடியென்மேல் வைத்தாய் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com